செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து விசேட தேவையுடைய ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகர் ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் வாய்பேச முடியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
குறித்த சடலம் இன்று சனிக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளது.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமையாற்றிவரும் 49 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான செபமாலை ஜெயகாந்தன் குருஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குறித்த நிறுவன காரியாலயத்தில் தங்கியிருந்து அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமைக்குச் சென்றுவருவதாகவும், இரவில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டுவரும் இவர் வழமைபோல நேற்று வெள்ளிக்கிழமை கடமையிலிருந்து திரும்பி அங்கு இரவு உணவை உண்டபின் காரியாலய கதவைப் பூட்டிவிட்டு படுக்கைக்குச் சென்றுள்ளார்.
சம்பவதினமான இன்று காலை 11 மணி ஆகியும் காரியாலய கதவு திறக்கப்படாததையடுத்து கதவை உடைத்து உள் சென்றபோது அங்கு அவர் படுத்த படுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.