மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார்! தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமையுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு நடத்தி முடிவு ஒன்றை எட்ட வேண்டும். அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே உள்ளது.
மாகாண சபை கட்டமைப்பு நாட்டில் இப்போதும் உள்ளது. அதற்கான சட்டங்கள், அதற்கான அமைச்சுக்கள், பொறிமுறைகள் என அவை அனைத்தும் நடைமுறையில் உள்ளன.
எனினும், அவை ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளினால் செயற்படுத்தப்படுகின்றன. அதனை முழுமையானதாகக் கருத முடியாது என்பதால் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அதனூடாக மக்களுக்கான ஜனநாயகம் கிட்டுவதுடன் அதன்மூலம் மக்களுக்கான சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு.
புதிய தேர்தல் முறை, எல்லை நிர்ணயம் எனப் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மேலும் பல வருடங்களை வீணடிக்க முடியாது. பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறு நடத்துவதற்கு சிக்கல்கள் இருக்குமானால் அதற்கான ஒரு திருத்தத்தை மேற்கொள்ளவும் முடியும்.
அதேவேளை, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய ஆணைக்குழு பொறுப்பை ஏற்றுக்கொண்ட மறுநாளே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளது.
தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம். அதற்கான செயற்பாடுகள் மந்த நிலையில் உள்ள நிலையில் அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்து அதற்கானப் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பிலும் பிரதமரோடு கலந்துரையாடியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.