முல்லைத்தீவில் மக்கள் குறைகேள் சந்திப்பை நடத்திய ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
இதன்போது, வனவளத் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள, கருவேப்ப முறிப்புக் குளத்தின் கீழான மக்களின் வயல்நிலங்களையும், பாரிய நிதிச்செலவில் சீரமைக்கப்பட்டும், பயன்பாடில்லாமல் காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் விவசாய வீதிகளைச் சீரமைத்தல், விவசாயக் கிணறுகளைச் சீரமைத்தல், குளங்களின் சீரமைப்பு, வாய்க்கால் சீரமைப்பு, கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல், யானைவேலி அமைத்தல், அணைக்கட்டுக்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது ஒதியமலைக் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டன.
அஞ்சலி
அதேவேளை, இதன்போது ஒதியமலைப்ப பகுதியில் அமைந்துள்ள கருவேப்ப முறிப்புக்குளத்தின் கீழான வயல்நிலங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரிய நிதிச் செலவில் சீரமைக்கப்பட்ட கருவேப்பமுறிப்புக்குளம் பயன்பாடின்றிக் காணப்படுகின்றது. எனவே குறித்த விவசாயக்காணிகளை விடுவிப்பு செய்துத் தருமாறும் அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி ஒதியமலைக் கிராம மக்கள் பலர் இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுவதுடன், தற்போதும் ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட கிராம மக்களுக்கு டிசம்பர் 02ஆம் திகதியில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அபகரிக்கப்பட்ட காணிகள்
குறித்த படுகொலைச் சம்பவத்திற்கு பின்னர் அங்கிருந்த தமிழ் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததுடன், நீண்டகாலத்திற்கு பின்னரே தமது பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்தமையினால் அவர்கள் இடம்பெயர்விற்கு முன் விவசாயம் மேற்கொண்ட காணிகள் அனைத்தும் தற்போது பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், இவ்வாறு பற்றைக் காடுகளாகக் காணப்படும் மக்களின் விவசாயக் காணிகளை வனவளத் திணைக்களம் தமது பகுதிகள் என தற்போது அபகரித்துள்ளது.
குறிப்பாக கருவேப்பமுறிப்பு குளத்தின் கீழான சுமார் 110ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களின் வயல் காணிகள் இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)