நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ரதன தேரர்
எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மேற்கொள்ளும் முயற்சி சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர்(Athuraliye Rathana Tero) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்த்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அத்துரலியே ரதன தேரர் நீக்கப்பட்டுள்ளமை குறித்து தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அப்படி அறிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய ஒரு மாத காலம் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள் அத்துரலியே ரதன தேரர், சட்ட நடவடிக்கை எடுக்காது போனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும்.
அவர் சட்ட நடவடிக்கை எடுத்தால், வழக்கு விசாரணை முடியும் வரை ரதன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கலாம் எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.