சஜித்துக்குத் தொலைபேசி ஊடாக ரணில் பிறந்தநாள் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்குத் தமது பிரதிநிதிகளையும் ரணில் அனுப்பியுள்ளார்.
சஜித்துடன் இணைந்து செயற்படத் தயார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் 59ஆவது பிறந்தநாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, சிரேஷ்ட உப தலைவர் சாகல ரத்நாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க எம்.பி. ஆகியோர் பங்கேற்று வாழ்த்துக் கூறினர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியை நோக்கிப் பயணிப்பதை நேற்றைய நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
சஜித்தின் பிறந்தநாள் நிகழ்வில் ஐ.தே.க. பிரதிநிதிகள் பங்கேற்றமை இரு தரப்பு இணைவுக்கான இறுதியான – உறுதியான சமிக்ஞை எனத் தெரியவருகின்றது.
சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். சஜித்துடன் இணைந்து செயற்படத் தயார் என்பதையே ரணில், சஜித்துக்கான பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார் என்று ஐ.தே.க. ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

