முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க லண்டனில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் விசாரணை
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025 ஒகஸ்ட் 22ஆம் திகதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதுடன், பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2025 ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, ரணில் விக்ரமசிங்கவை ரூ. 50 இலட்சம் மதிப்புடைய மூன்று தனிப்பட்ட பிணைகளில் செல்ல அனுமதித்தார்.
மேலும், வழக்கை 2025 ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 2026 ஜனவரி 28ஆம் திகதிக்குள் விசாரணைகளை முடிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.