பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காலம் முடிவடையும்: வேலுசாமி இராதாகிருஸ்ணன்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு துணையாகச் செயற்படும் பட்சத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காலமும் முடிவடையும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உதவிகள் அரசியல் தலையீடுகளின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 19ஆவது திருத்தச் சட்டத்திலிருந்த சில நன்மையளிக்கும் விடயங்கள் 21ஆவது திருத்தச்சட்டத்தில் இல்லாவிட்டாலும், இரட்டை குடியுரிமையை நீக்குவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை அரசியலில் சுமூக நிலைமையொன்று உருவாகும் பட்சத்திலேயே, தொடர்ந்தும் உதவிகளை வழங்க முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னராக 21ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.