ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பு ரணில்! அரசாங்க பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
இலங்கையில் தொடர்ந்து வரும் போராட்டங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர், ஊடகத்துறை மீது அடக்குமுறை வேண்டாம். தற்போதைய ஜனாதிபதியை ஓட ஓட விரட்டியவர்கள் ஊடகத்துறையினர். மக்களை ஊடகத்துறை தான் வழிநடத்தியது.
ஆகவே ஊடகத்துறையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. நீங்கள் (பிரதமர்) உடனடியாக பதவி விலக வேண்டும். மக்கள் போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும்.
மிலேச்சத்தனமாக பெண் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை இப்போராட்டத்தில் தாக்கும் போது இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருந்தது.
இதற்கான முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும். எனவே ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு விலகி வீடு செல்வதன் ஊடாக உங்களுக்குரிய கௌரவத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.
அத்துடன் எமது தொழிற்சங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் எம்மை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். மிக விரைவில் பொது ஊழியர் சங்க போசகர் பதவியில் இருந்து அவரை எதிர்காலத்தில் நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
டக்ளஸ் தேவானந்தா, சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட ஏனைய கட்சி பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தையும் மக்களையும் ஏமாற்றியவர்களாகவே கருதுகின்றோம்.
இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். கொழும்பு மக்கள் புரட்சி போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு புரட்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனூடாக புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.



