சிங்கப்பூர் சென்ற ரணிலின் தந்திரோபாயம்! தகவலறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நல பரிசோதனைகளுக்காக நேற்று (15) சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அவரது உடல்நிலை தொடர்பான பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்காக புதன்கிழமை (18) மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கமான வட்டாரங்களின் தகவல்
அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் அபாயம் நிலவுகின்ற நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருத்துவ பரிசோதனைகளும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகளும் நிறைவடைந்த பின்னரும் அவர் ஓய்வெடுக்க மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை மருத்துவமனையில் தங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில்,சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சட்டவிரோதமாக இங்கிலாந்து பயணம் செய்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை முழுமையாக நிறைவடைந்து, அதற்கான குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்த மார்ச் மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

விசாரணை முடிவடைந்த பிறகு மார்ச் மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றாலும், வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், அந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்திலிருந்து மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் வரும் ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெறவுள்ளன.
பயணத் தடை
எனினும், இந்த முக்கிய வழக்கில் அடுத்த கட்டமாக மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பயணத் தடை தற்போது நீதிமன்றத்தில் நடைமுறையில் இல்லை. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அத்தகைய தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வெளிநாடு சென்றிருப்பது இந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக தவிர்க்கும் வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்றும் கருத்து வெளியிடப்படுகிறது.
மேலும், சிங்கப்பூரில் சுற்றுலா விசாவை ஒரு மாதத்திற்கு மேல் நீட்டிப்பது எளிதானது அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.