தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் போராட்டம்
இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரத்தில் நடாத்தப்பட்ட நடை பயண போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 3ஆம் திகதி கடற்றொழிலிற்கு சென்ற 23 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்ததோடு இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் வழக்கு கடந்த 16ஆம் திகதி இலங்கை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் விஜயம்
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அதில் 20 கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் இரண்டு படகு ஓட்டுனர்களுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனையும், ஒரு கடற்றொழிலாளர் இரண்டாவது முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
குறித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிவதற்காக பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்து கடற்றொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தொடர் வேலை நிறுத்தம்
அத்துடன், பேச்சுவார்த்தையில் விரைவில் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதியை ஏற்றே கடற்றொழிலாளர்கள் தங்களது நடை பயண போராட்டத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படும் வரை ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
