இராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
தமிழக மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடைமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சை தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு, இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஆனால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை செய்வதாக இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் இலங்கை அரசின் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சை தீவு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு அதையும் மீறி அப்பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதைக் கண்டித்தும் பாரம்பரிய இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத்தரவலியுறுத்தியும், இன்று புதன் கிழமை காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இலங்கை கடற்படையின் தொடர் சிறைபிடிப்பைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து 11வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
