தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி - கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இன்று கைது செய்யப்பட்ட மீன்வள துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணலை சுத்தம் செய்து சந்தைக்கு விடுவிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தும் மீன்வள கூட்டுத்தாபனத்திற்கு 2.62 பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் உபாலி லியனகே கைது செய்யப்பட்டார்.
பிணையில் விடுதலை
அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுசீட்டை நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்களா என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் நீதவான் வினவியுள்ளார்.
இதன்போது அந்த விடயங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.