புதிய சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடம் இருந்து அழைப்பு.. ரஜத் படிதார் முன்வைத்த கோரிக்கை
புதிய சிம் அட்டையை வாங்கிய ஒரு நபருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் உள்ளிட்டவர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அண்மையில் புதிய சிம் அட்டையொன்றை வாங்கியுள்ளார்.
இதற்கிடையில், கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் முந்தைய தொலைபேசி இலக்கம் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது.
திடீர் அழைப்புக்கள்..
அதன் காரணமாக, குறித்த நபருக்கு ரஜத் படிதாரின் பழைய தொலைபேசி இலக்கத்தை அந்த சிம் அட்டை நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், அவர் சிம் அட்டையை வாங்கிய சில நாட்களில், குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகிய வீரர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஜத் படிதார் அந்த நபருக்கு அழைப்பு ஏற்படுத்தி, “நான் ரஜத் படிதார் பேசுகின்றேன். இந்த சிம் அட்டை எண் என்னுடையது. என்னிடம் திரும்ப கொடுத்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து சில மணி நேரங்களில் குறித்த இளைஞரின் இல்லத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். பின்னர் உண்மையை அறிந்த அந்த நபர் குறித்த சிம் அட்டையை திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



