இன்னும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அரசியல் தரப்பினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முழுமையாக நிராகரித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, தாமதிக்காமல் விரைவாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டச் சிக்கல்கள் நிறைந்துள்ள மாகாண சபை தேர்தல்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பல ஆண்டுகாலமாக நடத்தப்படாமல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாகவுள்ளது. ஆனால், தேர்தல் முறைமை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கு உரித்தாக்கப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் முன்னிலையாகி, எமது தரப்பு யோசனைகளை நாம் ஏற்கனவே விரிவாக முன்வைத்துள்ளோம்.
அதேபோன்று, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் முன்னிலையிலும் பல யோசனைகளை சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களம் மாகாண சபைத் தேர்தல் குறித்து மூன்று முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளது.
மூன்று மாதங்களில் அறிக்கை
அத்துடன், விசேட செயற்குழு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஒருசில விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடித் தீர்வு காண வேண்டியுள்ளதால், இக்குழுவின் செயலாற்றுகைக் காலத்தை மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்த விசேட செயற்குழு தனது விதப்புரைகள் மற்றும் யோசனைகளை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தவுடன், உரிய சட்ட திருத்தம் ஊடாக இறுதித் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும்.
அதன் பிறகு, எந்தத் தேர்தல் முறைமையின் கீழ், எந்த வடிவத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது சட்ட ரீதியாகத் தீர்மானிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, மாகாண சபைத் தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என்றார்.