இலங்கை மருத்துவத்துறையில் அறிமுகமாகும் QR முறைமை
காலி - கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நேரில் பார்வையிட்டுள்ளார்.
மருந்து பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த 'ஸ்மார்ட் டோக்கன்' முறைமை நடைமுறைக்கு வந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம்
இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக இவ்வாறான திட்டம் கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நடைமுறையினால் நோயாளர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் கிடைத்துள்ள வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் கேட்டறிந்ததுடன், இத்திட்டத்தை மேலும் முறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இதுவொரு முன்னோடித் திட்டமாகவே பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் இதனை 'QR' முறைமை ஊடாக மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.டி.யு.எம். ரங்க தெரிவித்துள்ளார்.

மருந்துகளை பெறும் முறை
இதன் மூலம் வெளிவாரியாக மருந்து பெறுவதற்கும் இதே முறைமையை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், முப்படையினர், பொலிஸார், மதகுருமார்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்காக இந்த நடைமுறையில் விசேட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் முறையின் கீழ், நோயாளர்கள் தங்களது மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, மருந்து விநியோகிக்கும் இடத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு டோக்கன் ஒன்று வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து குறித்த இலக்கம் அழைக்கப்படும் போது மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.