புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
மூன்றாவது நாளாகவும் இன்று பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளைய தினம் மக்கள் நடமாடக்கூடிய வாய்ப்புள்ள இடங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு
மாவட்டத்திலும் கோவிட் தொற்று நிலைமைகள் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில், மாங்குளம் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றைத் தொடர்ந்து ஒரு தொகுதியினருக்கும், புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊடாக இன்னொரு தொகுதியினருக்கும் கோவிட் தொற்று பரவி வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே கடும் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
அதற்கமைய, முக்கிய நகரங்கள் பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர்ப்பகுதி, பேருந்து தரிப்பிடம் மற்றும் திருமுறிகண்டி ஆலய வளாகம் மற்றும் அதனை அண்டிய கடை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்கள் இணைந்து தொற்று நீக்கும்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.