வவுனியாவில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் (Photo)
வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியினை மறித்தமையால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (15) அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 6 மணிமுதல் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
போராட்டம்
எனினும் பிற்பகல் 3 மணியான போதும் பெட்ரோல் அங்கு வழங்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ9 வீதி மற்றும், மன்னார் வீதி ஆகியவற்றை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீதிகளுடனான போக்குவரத்து ஒரு மணிநேரம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுற்ப்பட்டனர். இதன்போது பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் இருப்பு
பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இருப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களால் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசாரால் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் இருப்பு கண்காணிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருப்பு அற்ற நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சற்று
நேரத்தில் கலைந்து சென்றுள்ளனர்.
காலைமுதல் பெட்ரோலுக்காக பல மணிநேரம் காத்திருந்த நிலையில் ஏமாற்றத்துடன்
திரும்பி செல்வதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



