மன்னார் பொது வைத்தியசாலையில் மரணிப்பவர்களின் சடலங்களை கையளிப்பதில் தாமதம் -பாதிக்கப்பட்டவர்கள் விசனம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காகக் கொண்டு செல்கின்ற சடலங்கள் பலத்த தாமதத்தின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வீடுகளில் இயற்கை மரணம் எய்திய அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழக்கின்றவர்களின் சடலங்கள் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அண்மைக் காலமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்ற சடலங்கள் தாமதித்த பின்னரே உறவினர்களிடம் கையளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இயற்கை மரணம் எய்திய அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைத்து உடனடியாக பி.சி.ஆர்.அல்லது அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
எனினும் குறித்த பரிசோதனை அறிக்கைகள் தாமதித்து வருகின்ற நிலையில் சடலங்கள் சுமார் 2 நாட்கள் வரை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுத் தாமதிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 6 ஆம் திகதி அதிகாலை உயிரிழந்ததாகக் கூறப்பாடும் நானாட்டான் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட வைத்தியர் ஒருவரின் சடலம் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு எவ்வித தாமதங்களும் இன்றி உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினருக்கு ஒரு சட்டமாகவும் மக்களுக்கு ஒரு சட்டமாகவும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகம் நடந்து கொள்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதங்கள் இன்றி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.