காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனை விவகாரம் : சட்ட நடவடிக்கை பாயும் என ஏற்பாட்டாளர் எச்சரிக்கை
கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்ட முறையில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது என்று அதன் ஏற்பாட்டாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது நிறுவனங்களின் தூய்மையான கலாசார முயற்சிக்கு அரசியல் உள்நோக்கத்துடன் களங்கம் விளைவிக்க முயலும் நபர்களுக்கு எதிராக, அடுத்தகட்டமாகச் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
நிகழ்விற்கான பதிவுக்கட்டணமாக
இந்த விவகாரம் குறித்து கொழும்பில் இன்று(27.06.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் வெளியிட்ட விளக்கங்கள் வருமாறு,
"இந்தக் கின்னஸ் சாதனை நிகழ்விற்கான பதிவுக்கட்டணமாக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் ரூபா வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

உண்மையில், பங்கேற்ற ஒட்டுமொத்த மாணவர்களில் 4 ஆயிரத்து 100 பேரிடமிருந்து மட்டுமே தலா 4 ஆயிரத்து 500 ரூபாக்கள் பதிவுக்கட்டணமாகப் பெறப்பட்டது.
எஞ்சிய பெருமளவிலான மாணவர்கள் வறிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால், நடன ஆசிரியர்களின் உத்தியோகபூர்வ பரிந்துரையின் பேரில், எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகவே இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
வசூலிக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் இலங்கையிலுள்ள 'சங்கமிலியா' நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலேயே வைப்பிலிடப்பட்டுள்ளதே தவிர, இந்திய நிறுவனத்துக்கோ அல்லது தனிநபர்களின் கணக்குகளுக்கோ அணுவளவும் அனுப்பப்படவில்லை. இதற்கான முறையான வரவு - செலவுக் கணக்குகள் எம்மால் பேணப்பட்டு வருகின்றன.
இதுவொரு அரச உத்தியோகபூர்வ நிகழ்ச்சி அல்ல, முற்றிலும் எமது தனியார் அமைப்பின் முயற்சியாகும். இதற்காக அரசிடமிருந்து நாங்கள் எவ்வித நிதி உதவியையும் கோரவில்லை.
எனினும், இதற்கான அனுமதிகளைப் பெற நாம் முற்பட்ட போது, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், இது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் கலாசாரத்துக்கும் சர்வதேச ரீதியில் பெருமை சேர்க்கும் விடயம் என்பதை உணர்ந்து, இதற்கான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதிகளைத் தாமதமின்றிப் பெற்றுத் தருவதற்கான தார்மீக ஒத்துழைப்புகளை மட்டுமே வழங்கினார். இதில் எவ்வித அத்துமீறல்களும் இல்லை.
அவதூறு பரப்புவோருக்கு எதிராக
கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழில் மாணவர்களின் தனிப்பட்ட பெயர்கள் அச்சிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எவ்வித நியாயமும் இல்லை.
கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, குழுவாகச் செய்யப்படும் சாதனைகளுக்கான அசல் சான்றிதழ் 'சங்கமிலியா ஹாலிடேஸ் இலங்கை', 'சங்கமம் குளோபல் அகாடமி இந்தியா' மற்றும் 'பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள்' என்றே கின்னஸ் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தனித்தனியாக அசல் சான்றிதழ் அல்லது மின் - சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், கின்னஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய கட்டணங்களைச் செலுத்தி அதனை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது குறித்து நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். உலக அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த இந்த உன்னத நிகழ்வைச் சிலர் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் சீர்குலைக்க முயல்வது, இந்த நாட்டிய கலையை நம்பியிருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அவதூறு பரப்புவோருக்கு எதிராக எமது சட்டத்தரணிகள் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.