நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்து வீதிக்கு இறங்கிய கொட்டகலை - ரொப்கில் மக்கள்
கொட்டகலை - ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை 4.30 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 46 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்து தளபாடங்கள் உட்பட பல உடமைகளை இழந்துள்ள போதும் தமக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண நிதி
அவர்கள் மேலும் கூறுகையில், தமக்கு நான்கு பிஸ்கட் பக்கட்டுக்கள் மாத்திரமே கிடைத்ததாகவும், அதனை ஐந்து வயதுக்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சாப்பிட கூடாது என தெரிவித்ததாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிராம சேவகர் 46 குடுபங்களுக்கு 25000 ரூபா நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எழுதி சென்றதாகவும், இதில் சுமார் 20 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணம் நிதி கிடைத்ததாகவும், ஏனைய 26 குடும்பங்களுக்கு இது வரை நிவாரணம் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடனடியாக போராட்ட பகுதிக்கு விஜயம் செய்த கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனையும் நுவரெலியா பிரதேச செயலாளரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டெவோன் நீர்வீழ்ச்சியில் பாயும் நீர் டெவோன் கால்வாய் பகுதிகளில் நிரம்பி வழிந்ததால், லோகில் தோட்டத்தில் உள்ள 46 வீடுகள் தரையில் இருந்து 8-9 அடி உயரத்தில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருக்கும் மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் பணம் உரிய கிடைக்க வேண்டும். இவர்களின் சிலருக்கு மாத்திரம் குறித்த பணம் கிடைத்துள்ளது. ஏனையவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உள்ளனர் இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், பிரதேச கிராம உத்தியோகத்தர் மூலம் கிடைக்கும் பரிந்துரையின் பேரில் பணம் தற்போது வழங்கி வருவதாகவும் வரும் நாட்களில் பணம் தவணை முறையில் செலுத்தப்படுவதால், பணம் கிடைக்காதவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் உடனடியாக அது வழங்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.





