சமனல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை! பலப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு
சமனல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இன்று (05) விவசாயிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்தில் இருந்து போதியளவு நீர் கொள்ளளவை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தண்ணீர் திறக்கும் வரை அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர்கள் கூறியதன் காரணமாக இன்று சமனல நீர்த்தேக்கத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 1.4 வீதமாகவே காணப்படுகின்றது. இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு போதியளவு நீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.