இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய மார்கட் கட்டடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடலிற்கு முன்பாக கூடி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுசில்சாந்த, செயலாளர் அருணசாந்த, உறுப்பினர் சந்தியராஜன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிருசாந்த கீகனகே உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு நுவரெலியா நகர வர்த்தகர்களும் தங்களுடைய வியாபார நிலையங்களை ஒரு மணித்தியாலத்திற்கு மூடி தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கினர்.
இந்த சந்தர்ப்பத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இதன்போது கருத்து தெரிவிக்கையில், இன்று இலங்கையில் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் நாடு முழுவதும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
விவசாயத்தை மாத்திரமே நம்பியிருக்கின்ற இந்த விவசாயிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
தங்களுடைய முழுமையான வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் விவசாயிகள் செய்வதறியாத திகைத்துப் போயிருக்கின்றார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களை கண்டு கொள்வதாக இல்லை.
நுவரெலியாவில் விவசாயம் பாதிக்கப்பட்டால் இதனை நம்பியிருக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நாங்கள் ஒரு போதும் சேதன பசளைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதனை நடைமுறைபடுத்திய விதம் பிழையானது என்பதே எங்களுடைய கருத்தாகும்.
எதனையும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த திட்டத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்துவதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்றைய இந்த கோவிட் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப் போயிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறான புதிய நடைமுறைகள் ஏற்புடையதல்ல.
எனவே இந்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு அதனை சரியான திட்டமிடலுடன் நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.






அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
