மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தீப்பந்த எழுச்சி போராட்டம்
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றையதினம் (10.11.2025) நூறாவது நாளை எட்டிய நிலையில், இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மக்களையும், மக்களின் வாழ்விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100ஆவது நாளை எட்டிய நிலையில், இன்னும் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்
இந்தப் போராட்டத்தின் 100ஆவது நாளை நினைவுகூரும் நேற்றைய நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது மற்றும் அமைக்கப்பட்ட 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகியவையே குறித்த கோரிக்கைகளாகும்.
குறித்த கோரிக்கைகளை அரசாங்கம் தம் மக்களின் கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்தப் புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri