மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்: பொலிஸாருடன் முரண்பாடு
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்றிட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24ஆவது நாளாக இன்றைய தினம்(26) இடம்பெற்று வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்றையதினம்(26.08.2025) 24ஆவது நாளாக தொடர்கின்றது.
குறித்த போராட்டத்தில் அருட்தந்தை சக்திவேல் உள்ளடங்களாக அருட்சகோதரிகள் மற்றும் தென்பகுதியில் இருந்து வந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
முரண்பாடு
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், இன்றைய தினம்(26) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வந்தது.
இதன்போது, போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனு ஒன்றை வழங்குவதற்கு மாவட்ட செயலகத்திற்கு அமைதியான முறையில் நுழைந்த நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர்.
அப்போது, போராட்டக்காரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு ஆதரவு
இதன்போது, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்தார்.
இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டக்காரர்கள், அபிவிருத்தி குழுத் தலைவர், அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக, இன்றையதினம் அருட்தந்தை சக்திவேல் தலைமையில் அருட்சகோதரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



