மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பதற்கு எதிராக 26 பேருக்கு தடை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் ,பொது அமைப்புக்கள் உட்பட 26 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி உறுப்பினர்கள், காணாமல் போனார் உறவுகள் சங்கம், பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் உட்பட 26 பேருக்கு எதிராக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர், கரடியனாறு, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, காத்தான்குடி ஆகிய 10 பொலிஸ் நிலையங்களால் மாவட்டதிலுள்ள நீதிமன்றங்களில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அதனை உரியவர்களிடம் பொலிஸார் கையளித்துள்ளனர்.
இந்த நீதிமன்ற தடை உத்தரவில் பொலிஸ் பிரிவுகளில் உள்ள பிரதேசங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக 16ம் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு எந்தவிதமான கூட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களையே நடாத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் நோய் தடுப்பு விதிக்கு மற்றும் சட்டத்திற்கு முரணாக எதையும் நடாத்தக்கூடாது எனவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.