மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
மன்னார் கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுக்கும் விசேட கூட்டமொன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று(14.01.2024) மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிபனிப்பாளர் கலிஸ்ரன் ஒழுங்கமைப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை செயல்திட்டத்திற்கு கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு தொடர்பிலும், அத்துடன் மாவட்ட ரீதியாக இடம்பெற்ற சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழிலாளர்களால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன் கடல் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகளால் கிராம மட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளான டைனமோட், சுருக்குவலை, பத்தை வைத்தல், உள்ளூர் இழுவை படகு மீன்பிடி, இரவு நேர சுருக்குவலை, டைவிங் என பல்வேறு பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக கடற்படை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைக்கு அமைச்சர் உத்தரவு பிறப்புத்ததுடன் கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களும் கடற்படையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய இழுவை படகு
மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய இலுவை படகுகளை உள்ளூர் கடற்றொழிலாளர்கள் இணைந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்தங்களின் போது சூறாவளி, மற்றும் புயலின் போதும் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது நிவாரணம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் இந்திய இழுவை படகு தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்களுடனான விரைவில் கலந்துரையாடலை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


