சிறை பிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய 11 தமிழக கடற்றொழிலாளர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு - மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த ஐந்து கடற்றொழிலாளர்களையும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்களையுமே 10 வருடங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை நிபந்தனையுடன் விடுதலை செய்து இன்று(15) ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் சிறைபிடிப்பு
கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3 ஆம் திகதி மீன்பிடிக்க புறப்பட்ட கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 5 கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
பின்னர் மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறைக்காவலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கடந்த 11 ஆம் திகதி மாலை எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்களையும் விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் 11 பேருக்கும் எதிராக இன்று கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இதன்போது எல்லை தாண்டி இலங்கையை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தமை மற்றும் மீன் வளங்களை சேதப்படுத்திய ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது கடற்றொழிலாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 10 ஆண்டுகளிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் இரு படகுகளின் உரிமையாளர்களும் படகில் இருந்தமையினால் படகுகள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மீனவர்களின் தனியுடமை பொருட்களை மீள கையளிக்குமாறு நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.



