நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குறித்த நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 15 இலட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்
இது குறித்து மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை குறித்த நிறுவனம் கடந்த 2019 செப்டம்பர் 4 அன்று நேர்முக பரீட்சைக்கு அழைத்துள்ளது.
இந்நிலையில் நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் நிதி நிறுவன முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளருக்கு எதிராக பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த முகாமையாளர் 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சாட்சிகள் மற்றும் தடையப்பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.
எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையோடு, 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




