சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகள் இலங்கை இராணுவத்திற்கு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வழங்கும் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவம் மேற்கொள்ளும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று தற்போது மேற்கொண்டு வரும் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை இராணுவத்திற்கு வழங்க கடந்த ஜூலை மாதம் அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்தது.
மாதாந்தம் 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
இந்த பணிகளை இராணுவம் மேற்கொள்ள உள்ளதால், அனுமதிப் பத்திரங்களை அச்சிட அரசாங்கத்திற்கு செலவாகும் பணத்தை மீதப்படுத்த முடியும் என சுமித் அழககோன் குறிப்பிட்டுள்ளார்.