மட்டக்களப்பின் பிரபல பாடசாலையின் அதிபர்-ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு (Photos)
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இராமகிருஸ்ணமிசன் பாடசாலையின் உடைமைகள் கடந்த சில நாட்கள் சேதமாக்கப்பட்டுவருவதுடன், அதிபர், ஆசிரியர்களுக்குச் சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டைக் கண்டித்தும் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்களினால் போராட்டம் முன்னெடுப்பு
சாதாரண தரப் பரீட்சைக்காகப் பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டு இன்று மீண்டும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைக்கு வந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமக்கு தீர்வு வழங்கக் கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
பாடசாலைக்குள் இருந்த சீசிரிவி கமராக்கள், பாடசாலை அதிபரின் காரியாலயம், நடன ஆசிரியர் காரியாலயம் மற்றும் பாடசாலையின் தளபாடங்களை உடைத்துள்ளதுடன், சில மாணவர்களும் பெற்றோரும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் சுகுணதாஸ் ரவிசங்கர் தெரிவித்தார்.

பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பாடசாலை சமூகமும், கிராமமக்களும் அக்கறையற்று உள்ளமையால் தங்களுக்குத் தொடர்ந்து இந்த பாடசாலையில் கடமையாற்ற முடியாத நிலையுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைக்கு வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரும் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்கள்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
இது தொடர்பிலான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் த.அனந்தகுமார் தலைமையிலான குழுவினர் போராட்டம் நடத்திய அதிபர், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதன்போது உடனடியாக காவலாளி ஒருவரைப் பாடசாலைக்கு நியமிக்கவும் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கி எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரு வார அவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் தாங்கள் சுதந்திரமாக தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலைமை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இங்கு அதிபர், ஆசிரியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர்
த.அனந்தகுமார் தெரிவிக்கையில், ''பாடசாலைகள் தொடர்ந்து சிறப்பாக இயங்கவேண்டுமானால் மாணவர்களின் ஒழுக்கம் என்பது
மிகவும் முக்கியமானது. இவ்வாறான பிரச்சினைகளினால் ஆசிரியர்களும்
மன உளைச்சலுக்குள்ளாகி இடமாற்றம் கோரிவருகின்றனர்.
இது தொடர்பில் பாடசாலை சமூகமும் பொலிஸாரும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது இந்த பாடசாலை
நல்ல நிலைக்கு வருவதற்கான சாதகமான சூழல் ஏற்படும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.