‘‘நான்கு திசை பிரதேசங்களையும் நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு’’
வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா (kenichi yokoyama) விடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் சிறந்த அதிவேக நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைந்திருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் கலாநிதி சொன் வொன் அமைச்சர் ஜோன்ஸ்டனிடம் தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றைப் புதிதாக ஆரம்பித்தல் மேலும் புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்களைக் களை ஆரம்பித்தல் என்பன தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் நெடுஞ்சாலை அபிவிருத்தித்திட்ட முன்னெடுப்பு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்திப் பணிப்பாளர் இதன்போது வினவியதோடு இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேச வீதிகளை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதன் மூலமாக நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கிராமிய வீதி அபிவிருத்தி செயற்பாடுகள் வாயிலாகக் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு உந்துசக்தி அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்காகப் பணிப்பாளர் சொன் வொன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தெற்காசியாவில் சிறந்த நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜெயசுந்தரவின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட முன்னுரிமை வீதி (I Road)திட்டம் வெற்றியளித்தது. பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் கிராமிய வீதி அபிவிருத்திக்காக இந்த (I Road) மாதிரியே பயன்படுத்தப்படுவதாகவும் கலாநிதி சொன் வொன் குறிப்பிட்டுள்ளார்.
சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய 100000 கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் ஒரு இலட்சம் மரக்கன்று நடும் திட்டம் என்பன தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதி தாமதமடைவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு இந்த தாமதத்தைத் தடுக்க தேவையான தீர்மானங்கள் மற்றும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் வீதி அபிவிருத்தி முன்னேற்றம் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி பணிப்பாளர் , அமைச்சரிடம் கூறினார்.
நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா ஆகியோருடன் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்.பிரேமசிரி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை பணிப்பாளர் கலாநிதி சென் வொன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri