பாரிய நிதி மோசடியில் ஜனாதிபதி அநுரவுக்கு தொடர்பா..! சர்ச்சையை கிளப்பும் சாகர காரியவசம்
அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி விவகாரத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரடித் தொடர்பு இருக்கின்றதா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த நிதி மோசடி சம்பவத்தை ‘ப்ரீ லோயர்’ அமைப்பு கண்டறிந்து முறைப்பாடு செய்த பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், அதுவரை அரசு இந்தத் திருட்டை மக்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
மேலும், "வரலாற்றில் திருட்டுத்தனமான அரசியலில் ஈடுபட்ட ஒரு குழுவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக, இன்று திறைசேரியே கொள்ளையடிக்கப்பட ஆரம்பித்துள்ளது.
இதனை ஒரு 'ஹேக்கர்' மீது சுமத்த அரசு முயன்றாலும், இது மிகவும் திட்டமிட்ட ஒரு கொடுக்கல் வாங்கலாகும்" என்றும் அவர் சாடினார்.
மறைக்கப்பட்ட மோசடி..
திறைசேரி பணம் திருடப்பட்டு மாதக் கணக்காகியும், நாட்டின் நிதி தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நாடாளுமன்றத்துக்கோ அல்லது பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ முறைப்பாடு செய்யப்படாமை பாரிய குற்றச்சாட்டாகும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யினரின் கடந்த கால வரலாறு தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், தொழில் புரியாமல் திருடிய பணத்தில் வாழ்ந்தவர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்றும் விமர்சித்தார்.
கடந்த கால நிலக்கரி மோசடியின் பெறுபேறாக மே மாதம் முதலாம் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதன் பாதிப்புகளை மக்கள் எதிர்வரும் வாரங்களில் அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
"ஜனாதிபதி அநுரகுமாரவின் கூற்றுப்படி நாடு ஒரு 'உண்டியல்' என வர்ணிக்கப்பட்டாலும், இன்று உலகிலேயே பாரிய கொள்ளை இடம்பெற்ற திறைசேரியைக் கொண்ட நாடு என்ற உலக சாதனையை அவர் படைக்க முயற்சிக்கின்றார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan