அனைவரும் அர்ப்பணிக்கத் தயாராக வேண்டும்! நாட்டு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் இறுதியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தீர்மானமிக்க இந்தத் தருணத்தில் நெருக்கடியான நிலையை உணர்ந்து திட்டமிட்டவகையில் நாடு முன்நோக்கிச் செல்ல வேண்டும்.
ஒரே குழுவாக ஒன்றிணைந்து கொவிட் பெருந்தொற்றைத் தோற்கடிக்க பணியாற்றுவோம் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
வெளிநாட்டு கடன் செலுத்தவும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டியிருந்த போதிலும், இவை அனைத்தையும் இலங்கை போன்ற மிகச் சிறிய பொருளாதாரத்தைக் கொண்டே கையாள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முதல் இணைப்பு
நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ஆற்றும் விசேட உரை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக நாடு முடக்கப்படுமா என பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஜனாதிபதியின் உரை நிகழ்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் நாடு முடக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஜனாதிபதியின் உரை இடம்பெற்று வருகின்றது.