போதைப்பொருட்களை உடனுக்குடன் அழிக்க ஜனாதிபதி உத்தரவு - கடுமையாகும் சட்டங்கள்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளைத் தாமதமின்றி உடனடியாக அழிப்பதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு சபையின் கூட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல்
நாட்டில் எத்தகைய பொருளாதார அல்லது சமூக சவால்கள் ஏற்பட்ட போதிலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசின் வேலைத்திட்டம் எக்காரணம் கொண்டும் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை வேகப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அதன் முக்கிய புள்ளிவிவரங்கள் வருமாறு:- கைது செய்யப்பட்டோர்: 1,24,412 பேர் (இவர்களில் 1,772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவர்).
ஹெரோயின்: 1,066 கிலோ 352 கிராம். ஐஸ் போதைப்பொருள்: 1,930 கிலோ கிராம்.கஞ்சா: 4,520 கிலோ கிராம்.கொக்கைன்: 270 கிலோ கிராம் (இது இலங்கையின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய தொகையாகும்).
போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதிப்பதில் தாமதம்
போதை மாத்திரைகள்: 9,83,143 மாத்திரைகள். கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதிப்பதில் ஏற்படும் தாமதத்தினால் வழக்குகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றங்கள் மற்றும் மாகாண மட்டத்தில் விசேட நீதித்துறை நடைமுறைகளை நிறுவுவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய புனர்வாழ்வுச் சட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி, போதைக்கு அடிமையானவர்களை முறையாகச் சமூகமயப்படுத்தத் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை
குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கெனத் தனித்தனியான புனர்வாழ்வுத் திட்டங்களைச் சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
இந்தத் தேசியப் பணியில் வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட மத ரீதியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் வழங்கும் அதே முக்கியத்துவத்தைப் புனர்வாழ்வு மற்றும் போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri