தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார்: சாணக்கியன் (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலை கண்டால் பயம், அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சல்லி சாம்பல்தீவு பகுதியில் இன்று (28.02.2023) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல் நடக்குமா? நடக்காதா?
வடக்கு கிழக்கில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரங்களை நடாத்தி வருகின்றோம்.
இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் சில பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் மக்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல் என்றாலே ஒரு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.
அரசியல் அபிலாசைகள்
2009 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெற்ற வாக்குகள் அடிப்படையில் பின்னடைவொன்று காணப்பட்ட விடயம் மறக்க முடியாத ஒரு விடயமாகும்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் மாறிவிட்டது என்று தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் பரப்பிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் இவ்வாறான ஒரு தேர்தல் நடந்தால் தமிழ் மக்களுடைய ஆதரவு எமக்கு கிடைக்கும் என உறுதியாகிவிட்டது.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தமிழரசு கட்சி முன்னெடுக்கும் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஸ் மற்றும் கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் - ருசாத்