வரிசை யுகம் இல்லை! மின் வெட்டு இல்லை: இதுதான் ரணிலின் ஆட்சி என்கிறார் பிரசன்ன
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்தவுடன் எரிபொருட்களுக்கான வரிசை இல்லை, மின் வெட்டு இல்லை, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக இறங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்குவேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மிகவும் தகுதியான ஒரு வேட்பாளரை நிறுத்தி அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அந்த வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும் இருக்க முடியும்.
அவர் வேட்பாளராக வந்தால் அவருக்கு நான் முழு ஆதரவு வழங்குவேன். வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தை அவர் இப்போது மெல்ல மெல்லத் தூக்கி நிமிர்த்தி வருகின்றார்.
ரணில் நிரூபித்துள்ள விடயம்
அவர் மிகவும் திறமைசாலி என்பதை நிரூபித்துள்ளார். அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் எரிபொருட்களுக்கான வரிசை இல்லை. மின் வெட்டு இல்லை. உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை.
டொலர் பிரச்சினை தீர்ந்துகொண்டு வருகின்றது. டொலரின் பெறுமதி குறைந்து நாணயத்தின் பெறுமதி அதிகரித்துக் கொண்டு வருகின்றது. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.
அப்படியான ஒரு திறமைசாலி தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்தால்
நாடு நிச்சயம் முன்னேறும். அவர் வேட்பாளராகக் களமிறங்கினால் நான் அவரை
ஆதரிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.



