ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு: முன்னாள் பணிப்பாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவவை குற்றப் புலனாய்வு திணைக்களம், நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
முன்னதாக, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், துசித ஹல்லோலுவ மீது சட்டத்தரணி அகலங்க உக்வட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
ஹல்லோலுவ மற்றும் இந்த அறிக்கையை இணையத்தில் பதிவிட்ட சமூக ஊடக ஆர்வலர்கள் இருவர் மீதும், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியிருந்தார்.
அதன்படி, நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஹல்லோலுவவை வாக்குமூலம் வழங்குவதற்காக பிரசன்னமாகுமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.