சித்திரைக்கு பின்னர் விசேட தலதா காட்சிப்படுத்தல்: ஜனாதிபதி வெளியிட்ட செய்தி
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொதுமக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
இது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இணங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று ஞாயிற்றுக்கிழமை (23) தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு
மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அவர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஸ்கிரிய மகா விகாரையின் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர்கள் மற்றும் சங்கச் செயற்குழு உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்ததுடன், மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
அதனையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
பாதாள குழுக்களிடையே மோதல்கள் வலுப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்களின் பாதுகாப்புக்குக்கு சிக்கலாக அமையவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரையில் அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையென்றும், அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜயமுனி, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.




