ஜனாதிபதி அநுர இன்று யாழ் விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுக்காகவே அவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
யாழில் ஜனாதிபதி
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனையை ஆரம்பித்து வைப்பார். அங்கிருந்து, யாழ். பொது நூலகத்துக்கும் அவர் செல்வார்.
இதன் பின்னர், மதியம் 1.30 மணியளவில் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைப்பார். அத்துடன், வேறு சில நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார்.
இதைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அநுரகுமார, வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணியைத் தொடக்கி வைப்பார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.



