கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் - வைத்தியர் இளையதம்பி உதயகுமார்
எந்தவித அச்சமின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தொற்று நோயிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவும் என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று உலகளாவிய ரீதியில் பெரும் தொற்று ஏற்பட்டு வருகின்றது. இதை எமது நாட்டிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எமது மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு இருந்தாலும் அதனை முன்னிலை அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அதேவேளை முதலில் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்குச் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனவே அனைத்து பாலூட்டும் தாய்மார்களும் அச்சமின்றி தடுப்பூசியை ஏற்றமுடியும்.
அதேவேளை கர்ப்பிணி தாய்மார்களும் வைத்திய ஆலோசனையில் தடுப்பூசியை எந்தவொரு தயக்கமே அச்சமே இன்றி தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
வழங்கப்படும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்து இந்த தொற்று நோயிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்கள்
கலந்துகொண்டு தடுப்பூசியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.