விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்த காணியில் தமிழர் வரலாற்று மையம்! தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியில் அமைய இருக்கும் தமிழர் வரலாற்று மையத்திற்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால் தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது விடயம் தொடர்பில் சில முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டிய நீதவான் இந்துஜா சிவலிங்கம், தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்றும், அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழர் வரலாற்று மையம் அமைத்தற்கு முயற்சி
ஆலடி வீதி, வல்வெட்டித்துறையில் உள்ள வே.பிரபாகரனின் சகோதரி மதியாபரணம் ஜெயதீஸ்வரிக்கு சொந்தமான குறித்த காணியில் தமிழர் வரலாற்று மையம் அமைத்தற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபையில் அனுமதிகோரி விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த இடத்தில் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தெற்கிலங்கையில் உள்ள சில தரப்புகள் இவ்விடயத்தை விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியாக உருவகப்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற அமர்வின் போதும் இந்த விடயம் பேசப்பட்டு உயர் கண்காணிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டுமான விடத்திற்கு தடையுத்தரவு கோரி பருத்தித்துறை நீதாவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸாரால் நேற்று முன்தினம் (20) வெள்ளிக்கிழமை இரகசியமான முறையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
பொலிஸாரினால் விண்ணப்பம்
வடமராட்சியை சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கிற்காக சென்றிருந்த நிலையில் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலான சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் காங்கேசன்துறை பொலிஸாரினால் குறித்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த காணியில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளரின் அற்றோணித்தத்துவம் (Power of Attorney) உரிமை பெற்றுள்ள ந. அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அங்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறி அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு காங்கேசன்துறை பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை குறித்த கட்டுமானத்திற்கு வல்வெட்டித்துறை நகரசபை உள்ளிட்ட தரப்பினரால் அனுமதி எவையும் வழங்கப்படாத நிலையில், எந்த அடிப்படையில் தடை உத்தரவு கோர முடியும் என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்பதினை அறிவித்த நீதவான் இந்துஜா சிவலிங்கம் அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 22 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.