உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு அரசியல்வாதிகள் இடையூறு! நீதிமன்றத்திற்கு அறிக்கை
உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில், அரசியல்வாதிகள் குழுவொன்று வேண்டுமென்றே மற்றும் மறைமுகமாகத் தலையிட்டு, அதன்மூலம் அவற்றுக்குப் பாரபட்சம் காட்டித் தடை ஏற்படுத்துவதாக, குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
விசாரணைகளுக்கு பாதகமாக செயற்படும் சுரேஷ் சலே
முன்னாள் தேசிய புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே, அத்துடன் உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தங்களுக்குத் தடை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான சுரேஷ் சலே, விசாரணைகளுக்குப் பாதகமான முறையில் நடந்துகொள்வதாக குற்றப்புலனாய்வுத்துறை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று , இந்த பாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் பின்னணி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் இதுவரை வெளியிடப்படாத அரசியல் பின்னணி வெளிப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது என்ற நியாயமான சந்தேகம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் மீது வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி, பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் விசாரணை அதிகாரிகளின் நம்பகத்தன்மைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டமொன்றை உருவாக்குவதன் மூலம், இந்த விசாரணைக்கு எதிராகப் பொதுமக்களைத் திரட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.
உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலில் ஈடுபட்டுள்ள நபர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தெளிவாகத் தெரிவதாக, குற்றப் புலனாய்வுத் துறை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளது.