கோவிட் தொடர்பில் அரசியல்வாதிகளே தீர்மானம் எடுக்கின்றனர்! - திஸ்ஸவிதாரண
கோவிட் பெருந்தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை அரசியல்வாதிகளே எடுக்கின்றனர் என இலங்கையின் முன்னணி தொற்று நோய் தொடர்பான பேராசிரியரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கோவிட் தொடர்பான தீர்மானங்களை மருத்துவர்கள் எடுப்பதில்லை எனவும் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுப்பதாகவும் இதன் காரணமாகவே கோவிட் குறித்த குழுக்களிலிருந்து மருத்துவர்கள் அடிக்கடி விலகுகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளை தற்போதைக்கு திறப்பது பொருத்தமானது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்களுக்கு தற்போதைக்கு தடுப்பூசி வழங்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சிறுவர்களுக்கு வழங்கினாலும் அவை சினோபார்ம் அல்லது ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளாகவே இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைசர் தடுப்பூசி வழங்கியதன் விஞ்ஞான பூர்வமான காரணிகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தடுப்பு செயன்முறைகளிலிருந்து தம்மை முழுமையாக ஓரம் கட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் இதுவரையில் நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பு வழங்கக்கூடிய தடுப்பூசி ஒன்று இதுவரையில் உருவாக்கப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
