அரசாங்கம் ஒரு நாள் தவணை வழங்கி நாட்டை முடக்கியிருக்கலாம் - செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
இலங்கை அரசாங்கம் திட்டமிடல் இன்றி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் நாடு முடக்கப்படுவதாக திடீரென விடுக்கப்பட்ட அறிவிப்பால் நகர்ப்பகுதிகளில் மக்கள் அதிகரித்த நிலை தொடர்பாக கவலை வெளியிட்டு இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
கோவிட் தொற்று அதிகரித்த போதே மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் இணைந்து நாட்டை முடக்கி கோவிட் தொற்றை கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.
எனினும் இது தொடர்பில் அசட்டை செய்து வந்த அரசாங்கம் வேண்டா வெறுப்பாக எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும் என்ற மக்கள் விரோத சிந்தனையுடன் திடீரென நாட்டை முடக்குவதாகத் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக பொது மக்கள் பலரும் நகர்ப்பகுதியில் அதிகளவில் ஒன்று கூடியிருந்தனர். இது கோவிட் தொற்றை நிறுத்துவதற்கு பதிலாக அதிகரிப்புக்கே வழிவகுத்துள்ளது.
வங்கிகள், நகை அடைவு வைக்கும் இடங்களில் மக்கள் அதிகமாகக் காணப்பட்டனர். வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
அரசாங்கம் ஒரு நாள் தவணை வழங்கி நாட்டை முடக்கியிருக்கலாம். திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.