நுவரெலியா மாவட்டத்திற்கு செப்டெம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள் - ஜீவன் தொண்டமான்
செப்டெம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற மாதாந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மிக வேகமாகப் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை மலையகத்தைப் பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரதேசங்களில் செறிந்து வாழ்ந்தாலும் இத்தொற்று தொடர்பில் அவர்களின் பாதுகாப்பிற்காக தற்போது பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கம் முதற்கட்டமாக 25000 தடுப்பூசிகளை மாத்திரம் வழங்கியிருந்தது . அதன் பின்னராக நாம் 50000 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டோம். இதன்படி 168406 தடுப்பூசிகளை மக்கள் இதுவரையிலும் முழுமையாகப் பெற்றுள்ளார்கள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 96 % ம், ஆசிரியர்கள் 99 % ம் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் இறந்து விடுவார்கள் என சமூக வலைத்தளங்களிலும் ஏனையோர்களது தவறான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் நிலவிவந்தன.
எனினும் அது உண்மைக்குப் புறம்பான பொய்யான வதந்தியாகும். எனவே மக்கள் தமது நலன்களில் அக்கறை கொண்டு பாதுகாப்பாக வாழ இத்தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
எனவே நுவரெலியா மாவட்டத்தில் 3 இலட்சம் தடுப்பூசிகளைச் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடையவேண்டும். அண்மையில் மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது. இதற்கு மாற்று நடவடிக்கையாக எமது தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாகவும் , பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகவும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய எதிர்வரும் வியாழக்கிழமை டயகமைக்கு நாம் நேரடியாகச் சென்று நினைவேந்தலாக மெழுகுவர்த்தியை ஏற்றி மௌன அஞ்சலியை நாம் செலுத்த வேண்டும். அத்தோடு மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
