கூட்டமைப்பினரை விமர்சிக்க சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு அருகதையில்லை - பா.அரியநேத்திரன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியோ, அதிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவோ அரசுடன் இணைந்து செயல்படும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சிப்பதற்கு எந்த அருகதைகளும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினருமான கலையரசன் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேசுவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அகமட் புர்கான் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது அதற்குப் பதில் கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது ஏனைய அரசியல் கட்சிகளைப்போன்று ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுக்கெல்லாம் வால் பிடிக்கும் கட்சியில்லை. கொள்கை ரீதியாகத் தமிழ்மக்களுடைய உரிமைகள் தொடர்பாகவே அரசுடன் பேசி தமது நோக்கை அடைவதற்காக உழைத்துவரும் ஒருகட்சியாகும்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2020, ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அரசுடன் இணைந்து செயல்பட்ட ஒருவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவார் என்ற அதி நம்பிக்கையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பெருவாரியான தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தமையால் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் ஆளும் தரப்பிலோ எதிர்த்தரப்பிலோ இல்லாமல் போனது.
அரசனை நம்பி புருசனை கைவிட்டநிலையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அநாதரவாக இருப்பதைக் கருத்தில் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை தமது கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கினர்.
கடந்த 2004,ம் ஆண்டு இன்றுவரை தமிழ்த்தேசியத்திற்காக உயிரைகொடுத்து தமிழ்த்தேசிய அரசியலை அம்பாறை மண்ணில் கால் ஊன்ற உழைத்தவரே தவராசா கலையரன் ஆவார்.
கடந்த இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத் தோளோடு தோள்போன்று பணிபுரிந்தவர் மட்டுமன்றி பல தேர்தல்களில் வேட்பாளர்களாக வருவதற்குப் பலர் முன்வராமல் அச்சத்தால் இருந்த வேளைகளிலும் துணிந்து முன்வந்து தமிழ்த்தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தவரே கலையரசன் ஆவார்.
அவ்வாறான ஒருவர் கடந்த 2006,ல் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராகவும், 2012, கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் 2015 பொதுத்தேர்தலிலும், 2020 பொதுத்தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு கணிசமான வாக்குகளைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்த ஒரு தமிழ்த்தேசியக் கொள்கைவாதியாக நாம் இனம் கண்டதாலேயே தேசியப்பட்டியல் த.கலையரசனுக்கு வழங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த்தேசிய அரசியலின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரலாற்றைக் கருத்தில் கொண்டே அவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் தேசிய பட்டியல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைவருக்கும் இந்த வரலாறு தெரியும்.
ஆனால் சிங்கள பேரினவாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வாய்ந்த ஒரு வடகிழக்கு மக்களின் உரிமைக்கான அரசியல் செயல்பாடுகளை வலியுறுத்தி இன்று சர்வதேசம் மதிக்கத்தக்கத் தலைவர் இரா.சம்மந்தன் ஐயாவைத் தலைமையாகக் கொண்டு அரசியல் செய்யும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்கிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.
நாம் வேறு ஒரு கட்சியில் வெற்றிபெற்றவரையோ, அல்லது வேறு கட்சியூடாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவரையோ எந்த விதத்திலும் பிழையாக விமர்சிக்கமாட்டோம். முதலில் அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒரு கட்சி உறுப்பினரை இன்னொரு கட்சி உறுப்பினர் பிழையாக விமர்சிப்பது என்பது
எந்தக்கட்சியாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
