பொலநறுவை – கொழும்பு கடுதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை!
பொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலநறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த ரயில் சேவையானது பொலநறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்குப் புறப்பட்டு காலை 9 மணிக்குக் கொழும்பினை வந்தடைகின்றது. அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்குப் புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது.
இந்தநிலையில் அமைச்சர் அவர்களே அதிகாலை 3 மணிக்கு பொறுநறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்குச் சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா என்பதனை ஆராய்ந்து பாருங்கள்.
அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடனேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலநறுவையில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானவர்கள் பயணிக்கின்றனர்.
எனவே பொலநறுவைக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொறுநறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்குச் சற்று முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா?
ஏனெனில் தற்போது மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயிலில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனினும் காலை 9 மணிக்குக் கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளைப் பூர்த்தி செய்து கொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்குத் திரும்பிச் செல்ல முடியும். நான் பொறுநறுவை – கொழும்பிற்கான ரயில் சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றே கேட்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “அதிகாரிகள் இதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றனர்.
எனவே வெள்ளோட்ட முறையில் இதனைச் செய்து
பார்க்க முடியுமா?“ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.