நாட்டின் பொருளாதார முடக்கத்தினால் கீழ் இறங்கியுள்ள ஜனாதிபதி - ஞா.சிறிநேசன்
டயஸ்போராக்களுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவர்களைத் தடை செய்தவர் தற்போது அவர்களைப் பேச அழைக்கிறார். அதாவது நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை போன்றவற்றால் அவர் கீழ் இறங்கி வரவேண்டிய நிலையிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்(Sirinesan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் வருமாறு,
கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்கள் சார்பாக அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு கட்சியாகும். பேரினவாத ஆட்சியாளர்கள் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள் என்பது வரலாறாகும்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுகின்ற கட்சியாகும்.
அந்த வகையில் அந்த நோக்கத்திற்காக உழைக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள், புலம்பெயர் தமிழ் உறவுகள், இந்த சிந்தனைகளோடு இயங்குகின்ற புத்திஜீவிகள், சிவிலமைப்புகள் எல்லாவற்றுடனும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற பார்வை எமக்குண்டு.
அதேவேளை கட்சியின் கொள்கை, நோக்கத்திற்கு அப்பால் பட்ட தன்னிச்சையான கருத்துகள், போக்குகள், தமிழர் தரப்பைப் பாதிக்கும், பலவீனப்படுத்தும் எந்தச் செயற்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடக்கூடாது என்பது எமது பார்வையாகும்.
சிலரது தன்முனைப்பான ஒவ்வாத கருத்துகளால் கட்சியோ மக்களோ பாதிப்படையக்கூடாது என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி - தமிழரசுக்கட்சியில் உள்ள சிலரால் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது, இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகத்தன்மையான கட்சி என்ற வகையில் சகோதரக் கட்சிகளிடையே வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவது சகஜமாகும்.
ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து இயங்கும் போது இப்படியான முரண்பாடுகள் வாதப் பிரதி வாதங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகவே அமையும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் பொறுப்புணர்வுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சிலவேளை தன்னிச்சையான தன்முனைப்பான கருத்துகள், செயற்பாடுகளை யாராவது முன்வைத்து அவற்றை நியாயப்படுத்துவதற்காக வாதங்கள் செய்ய முற்படுகின்ற போதும், முரண்பாடான கருத்துக்களைக் கொப்பளிக்கின்ற போதும் பிரச்சினைகள் எழுகின்றன.
ஆனால், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழர் ஐக்கியச் செயற்பாட்டுக்குள் வந்த பின்னர் முன்பிருந்ததை விட வளர்ச்சியடைந்துள்ளன. அதேவேளை தமிழரசுக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய ஆசனம் கூட ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மையாகும்.
ஆகவே, த.தே.கூட்டமைப்பினுள் கருத்து வேறுபாடுகள், போட்டிகள், ஏற்படுகின்றன என்பது உண்மையாகும். ஆனால் யாரும் யாரையும் ஓரங்கட்ட வேண்டிய தேவை இல்லை. வார்த்தைப் பிரயோகங்கள் முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதையும் காணமுடிகின்றது.
பரஸ்பரம் தவறான வார்த்தைகளைக் கையாளாமல் இருப்பது இதற்கான பரிகாரமாக அமையும். அதே போன்று எப்படியாவது தேர்தலில் வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காகத் தவறான வழிகளைக் கையாள்வதையும் தவிர்க்க வேண்டும்.
அதாவது விருப்பு வாக்குகளை அதிகரிப்பதற்காக மற்றவர்களின் விருப்பு வாக்குகளைக் கணிப்பின் போது குறைக்கின்ற தவறான செயற்பாடுகள் நடைபெறக்கூடாது.
கேள்வி - அண்மையில் ஜனாதிபதி நியுயோர்க்கில் தெரிவித்த கருத்துகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் - அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்ற போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தைச் சந்தித்து இருந்தார். அவரிடம் சில கருத்துக்களைக் கூறி இருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் நஷ்ட ஈடுகள் வழங்குதல், புலம்பெயர்ந்த தமிழ் டயஸ்போராக்களுடன் பேச்சு வார்த்தை நடாத்துதல், சிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தல் போன்ற கருத்துக்களைக் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல் என்பதன் மூலமாக அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அப்போதைய பாதுகாப்புச் செயலரும், இப்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டு விட்டார்.
ஏற்கனவே கோட்டாவின் யுத்தம் என்ற நூலின் மூலமாக யுத்தத்திற்கான முழு உரிமையைக் கோரிய தற்போதைய ஜனாதிபதி கடத்தப்பட்டவர்கள், படையினரிடம் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றால், கொன்றவர்கள் யாவர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆனால் கொன்றவர்களுக்கு விசாரணைகளோ சட்ட நடவடிக்கைகளோ இல்லை என்பதால் குற்றவாளிகள் யாவர் என்று தெரியாமலே மன்னிக்கப்படப் போகின்றார்கள். ஆனால் குற்றவாளிகள் யாவர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.
எனவே இங்கு சட்டவாட்சி, மனிதவுரிமை, ஜனநாயகம் என்பதெல்லாம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டுப் பொறிமுறை இங்கு இல்லை அது தமிழர்களுக்கு நீதி வழங்காது என்பது புலனாகின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்குரிய நஷ்ட ஈட்டுத்தொகையை இந்த அரசினால் வழங்க முடியாது, அவ்வாறு வழங்கினாலும் அது அற்ப சொற்பமாகவே அமையும் என்பதும் தெளிவாகிறது.
டயஸ்போராக்களுடன் பேசத்தான் தயார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவர்களைத் தடை செய்த ஜனாதிபதி தற்போது அவர்களைப் பேச அழைக்கிறார். அதாவது நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை போன்றவற்றால் ஜனாதிபதி இறங்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
மேலும் சிறையிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை மன்னிப்பதன் மூலமாகக் காணாமல் ஆக்கியதற்குக் காரணமானவர்களையும் ஜனாதிபதி கண்டு கொள்ளாமல் விடுவார்.
அதே போல் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையையும் முடித்து விட நினைக்கிறார். மொத்தத்தில் ஒரு பக்கச்சார்பான நிலைப்பாட்டில் ஜனாதிபதி பயணிக்கிறார் என்பது வெளிப்படுகிறது.
கேள்வி - தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு வடக்கு கிழக்கில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமானதாகவுள்ளதா? அவ்வாறு இல்லாவிட்டால் இதனைச் சரியான முறையில் எவ்வாறு முன் கொண்டுசெல்லமுடியும்?
பதில் - வடக்கு- கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குத் தடைகளாக கோவிட்டின் தாக்கம், பயணத்தடை, அவசரக்கால நிலைமை, தற்போதைய அரசாங்கத்தின் கெடுபிடிகள் என்பன காணப்படுகின்றன. மேலும் மக்கள் சந்திப்பு, கூட்டங்கள் என்பவற்றை நேரடியாகச் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இருந்தாலும் P2P என்கின்ற மக்கள் எழுச்சிச் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பாரிய பங்களிப்பைச் செய்தன.நில ஆக்கிரமிப்புக்கு எதிரான வழக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்கிறது.
மேலும் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டங்களோடு மக்களுக்கான விழிப்புகளையும் எமது கட்சி செய்து வந்தது. அத்துடன் இளைஞர்களினதும் மகளிரினதும் பங்குபற்றலையும் மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் புலத்திலும் புலத்திற்கு அப்பாலுமாக புத்திஜீவிகள் சபையினை அமைத்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கட்சியினை வழிப்படுத்த வேண்டியுள்ளது. இதைவிட எமது கட்சிக்கென்று இணையத்தளம் தொலைக்காட்சி சேவை என்பனவும் மக்களை விழிப்பூட்டத் தேவையாகவுள்ளது.
மேலும் ஊடகங்களுடன் நெருங்கிச் செயலாற்ற வேண்டியுள்ளது. இதை விடவும் மக்கள் நலன் சார்ந்த சிரமதானப்பணிகள் நிவாரணப்பணிகள் என்பவற்றையும் ஆற்றியாக வேண்டும்.
தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் தொடர்ச்சியாக முன் கொண்டு செல்லும்போதுதான் அந்த பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கான களம் அமையும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும் போதே தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுகள் அதிகரிக்கும்.
கேள்வி - கிழக்கில் அண்மைக்காலமாகத் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது?
பதில் - கிழக்கில் சேனைச்செய்கை, தொல்லியல் இடங்கள், சிங்களக் குடியேற்றம், வனவளத்திணைக்களக்காணி, மகாவலி அபிவிருத்திக்கான காணி, இராணுவப் பயிற்சிக்கான தளம் என்ற அடிப்படையில் காணியபகரிப்புகள் நடைபெறுகின்றன.
இதை விடவும் மண்வளம் முழுமையாகச் சூறையாடப்படுகின்றன. மேலும் மதுபோதைக்கான நிலையங்கள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் குடிப்பழக்கத்தால் சீரழிக்கப்படுகின்றார்கள். இதை வட கஞ்சா, குளிர் போதைகள், கசிப்புகள் போன்ற போதைப் பொருட்களும் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுகின்றன.
கலாச்சார சீரழிவுக்கான களியாட்டங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. இஸ்லாமிய மதமாற்றங்களும் சலுகைகள் மூலமாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறான தமிழர்க்கு எதிரிடையான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
கேள்வி - கிழக்கில் தமிழ்த் தேசியத்தினை உறுதியான தளத்திற்குக் கொண்டுசெல்ல என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றீர்கள்?
பதில் - முதலில் தமிழ்த் தேசியம் பற்றிய விழிப்புணர்வு புதிய தலைமுறைகள் மத்தியில் சாதுரியமான முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும், இளைஞர் மகளிரின் பங்குபற்றல்கள் அதிகரிக்கப்படவேண்டும்.
நிபுணத்துவ ஆலோசனைக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கூடாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இயன்றவரைத் தீர்க்கவேண்டும். பகுப்பாய்வு மூலமாகக் கட்சி, தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் பலம் பலவீனம் வாய்ப்புகள் சவால்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.
கிராமிமட்டம், வட்டார மட்டம் என்ற அடிப்படையில் கட்சி வலுப்படுத்தப்படவேண்டும். கட்சிக்காக அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் கௌரவிக்கப்பட்டாக வேண்டும். பலமான நிதி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
புலத்தலைவர்கள் புலத்திற்கு அப்பாலுள்ள தலைவர்கள் பத்திஜீவிகள் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும். பல்வேறு தொழிற்சங்கங்கள் ஊடாகக் கட்சியை மேலும் பலப்படுத்த முடியும். தன்னிச்சையான சிலரது செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.
தமிழ்த்தரப்பை பலவீனப்படுத்தும் எந்தச்செயலையும் எவரும் செய்ய அனுமதிக்கக் கூடாது. பூகோள அரசியல் தந்திரோபாய அரசியல்களைத் தலைவர்கள் புரிந்து அதற்கேற்ப காய்நகர்த்தி வெற்றி காணவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.