தமிழகத்தின் அரசியல் புரட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லையாயினும் தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களை பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து இருப்பது என்பது கற்பனைக்கு எட்டாத விடயம் தான்.ஆயினும் இதனை தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு புதிய அரசியல் புரட்சி என்று சொல்வது தான் சாலப் பொருந்தும்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது. ஆயினும் அதிக ஆசனங்களை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்கும்படி தமிழகத்தின் ஆளுநர் கோராத நிலையில் த.வெ.க தலைவர் திரு ச.ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களும், இழுபறிகளும் தமிழகத்தில் அரசியலில் புதிய நெருக்கடிகளை தோற்றுவித்திருக்கிறது.
இந்நிலை நீடித்தால் தமிழகத்தில் ஒரு மக்கள் புரட்சி வெடிப்பது தவிர்க்க முடியாதாகிவிடும். அது ஏனைய கட்சிகளை பாரதூரமாக பாதித்து அவர்களுடைய அழிவுக்கு வழிவகுக்கும். இங்கே விஜய்யை குழப்பும் அரசியல் என்பது அவரை மேலும் வளர்க்கும் அரசியலாகவே முடிவடையும்.
விஜய்யின் வெற்றி
புதிய கட்சியை ஒன்றை ஆரம்பித்து இரண்டு வருடத்துக்குள் 59 வருட காலமாக பலமான கட்சிக் கட்டமைப்புடன் மாறி மாறி ஆட்சியை நடத்திய திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி முன்னிலைக்கு த.வெ.க வந்திருப்பது என்பது இலகுவானது ஒன்று அல்ல. ஆயினும் அந்த அதிசயம் தமிழக சனத்திரள் அரசியலில் நடந்தேறிவிட்டது.
விஜயின் வெற்றி என்பது ஏற்கனவே இருக்கின்ற அரசியல் தலைவர்களின் அரசியல் தோல்வியின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பின் வெளிப்பாடாகும். வெறுமனே சினிமா கவர்ச்சியினால்த்தான் விஜய்க்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று குறிப்பிடுவதில் உண்மை உண்டு தான்.
ஆயினும் சினிமாவில் எந்த அக்கறை இல்லாத முதியவர்கள் பெருமளவில் வாக்களித்திருப்பது என்பது வெறுமனே சினிமா கவர்ச்சியாள் அல்ல ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்களின் தான்தோன்றித்தனமான செயலும், மக்கள் நலன்கள் கவனிக்கப்படாமையும், தலைவர்களுடைய அரசியல் போதமையும், இவர்கள் மீதான வெறுப்பும், மற்றும் நம்பிக்கையீனகளினதும் கூட்டுமொத்த வெளிப்பாடாகும்.

தோல்வி அடைந்தவர்கள் தங்களுடைய தோல்விகளுக்குள்ளால் விஜயின் வெற்றியை பார்ப்பதை விடுத்து விஜயின் வெற்றிக்குள்ளால் தங்களுடைய தோல்வியை அணுகுவது என்பது அறிவியலுக்கு முரணான அணுகுமுறையாகவே பார்க்கப்படும். தோல்வி அடைந்திருக்கின்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தற்போது தாம் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கலாமா என்று அபிப்ராயங்களை வெளியிடுவதும், அதே நேரத்தில் கட்சியின் தலைவர்கள் அதனை மறுத்து அறிக்கைகள் விடுவதுமான நெருக்கடியான தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு பெரும் கொதிநிலை தோன்றியிருக்கிறது.
விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் விடுவது அரசியலமைப்பு விதிக்கும் முரணானது மாத்திரமல்ல அது தமிழக மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி நகரங்களை மக்கள் முற்றுகையிட்டு பெரும் போராட்டங்கள் வெடிக்கவும் வாய்ப்பாகி விடும்.
அது ஒருபுறம் இருக்க த.வெ.க ஆட்சி அமைப்பதை எதிர்த்து திராவிடக் கட்சிகளின் குழப அரசியலால இன்னும் ஒரு புதிய தேர்தலை அறிவிக்கும்படி கோரப்பட்டால் அது இப்போது த.வெ.க பெற்ற ஆசனங்களை விட அதிகப்படியான அசங்களை பெரும். அதே நேரத்தில் திராவிடக் கட்சிகள் மீள எழுந்திருக்க முடியாத அறுதியும் இறுதியுமான தோல்வியை சந்திக்கும்.
அது காங்கிரஸ் கட்சி எவ்வாறு தமிழகத்தில் தோல்வி அடைந்து திராவிட கட்சிகளை அதிகாரத்தில் அமர்த்தியதோ அத்தகைய ஒரு நிலைக்கு த.வெ.கழகத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிடும். இதனையும் திராவிடக் கட்சிகள் உணராதவர்கள் அல்ல. எதிரும் புதிருமான இரண்டு திராவிடக் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அல்லது அமைக்க முயன்றால் இந்த இரண்டு கட்சிகளிலும் இருந்து பல எம்.எல்.ஏ க்கள் கட்சியை விட்டு விலகி த.வெ.க வில் இணைந்து விடுவர்.
இப்போதும் அந்த அச்சம் காரணமாகவே இரண்டு கட்சிகளும் தங்கள் எம்.எல்.ஏ க்களை ஓரிடத்தில் குவித்து தனிமைப்படுத்தி உள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. குறிப்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் புதுச்சேரியில் உள்ள பூரணம் குப்பத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதி
எடப்பாடியும் அங்கு நோக்கி செல்வதாக சொல்லப்படுகிறது. ஆகவே கட்சி தாவுபவர்களை தடுக்கும் முகமாக சிறப்பு விடுதியில் கொண்டுபோய் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகும். மீண்டும் ஒரு புதிய தேர்தல் வந்தாலும் தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் மீதான வெறுப்பு அதிகரித்து த.வெ.க அணியினர் பெறு வெற்றி பெறுவர். ஆகவே தமிழக முதலமைச்சராக விஜய் அமர்வதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் 1967ற்கு பின் இரண்டு திராவிக் கட்சிகள் ஆட்சியை நடத்தியும் தமிழக மக்களுடைய தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல இந்த கட்சிகள் தாம் முன்வைத்த எந்த ஒரு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தவறியமையும் புதிய ஒன்றின் தேவையை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக மக்களுக்கு த.வெ.க அரசியல் பிரவேசமானது புதிய தேவையும் புதிய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், மாற்றம் ஒன்றே வளர்ச்சிக்கான படிநிலை என்பதனை இப்போது தமிழகம் உணரத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் இளைஞர்கள் அரசியலை பேசத் தொடங்கி அவர்களாகவே அரசியல் களத்திலும் குதித்து விட்டார்கள். இது எதிர்கால தமிழக அரசியலில் பல புதிய மாற்றங்களையும்? புதிய வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும் என்பது உண்மை. உலகளாவிய அரசியலிலும் சரி, பிராந்தி அரசியலிலும் சரி மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன.
அது இந்தியாவின் தமிழகத்திலும் சரி, ஏனைய மாநிலங்களாயினும் சரி, அந்த மாற்றத்தை தற்போது அவதானிக்க முடிகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களும் தங்களை மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுந்துவிட்டது என்பதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் புதிய வழியை தேடாமல் மீண்டும் பழைய வழியில் பயணிப்பதன் விளைவை கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தேசியச் சிதைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யுத்தத்தில் பெற்ற பெருந்தோல்வியும், அதில் பெற்ற படிப்பினைகளில் இருந்தும் ஈழத் தமிழர்கள் தம்மை திருத்திக் கொள்ளவில்லை. நாம் நமக்கான புதிய வழிகளை தேடவில்லை என்பது தமிழ் மக்கள் அறிவியல் மற்றும் அரசறிவியலில் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இருக்கிறார்கள் என்பதை வேதனையோடு இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது.
பெரும் போரையும், போரின் அழிவையும், சொல்லனா துன்பங்களையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் போர் தந்த பெருவலியிலிருந்து உன்னதமான சிந்தனைகளும், செயற்பாடுகளும் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் ஈழத் தமிழர்கள் மிதவாத அரசியல்வாதிகளிடம் சரணடைந்ததன் விளைவு அது ஈழத் தமிழர் அரசியலுக்கும், எதிர்காலத்திற்கும், அதன் பண்பாட்டு வளர்ச்சிக்கும், அறிவியல் மேல் எழுச்சிக்கும் தடையாக அமைந்ததோடல்லாமல் சீரழிவையே பரிசாகத் தந்து விட்டது.
இத்தகைய சூழ்நிலையில் 1991ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக மக்களுடனான பிணைப்பு அறுந்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளுடன் இருந்த உறவும் முறிவடைந்தும் விட்டது. விரும்பியோ விரும்பாமலோ இந்த உலகப் பந்தில் வாழ்கின்ற இரண்டு தமிழ்த் தேசிய இனங்களில் தமிழக தமிழ் தேசிய இனம் ஒரு அரைகுறை அரசை கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழினம் அரசற்ற இனமாகவே கடந்த 400 ஆண்டு காலம் தனது அரசியல் செல்போக்கை தீர்மானிக்க முடியாமல் தத்தளிக்கிறது. இந்த நிலையில் ஒரு அரைகுறை அரசை கொண்டுள்ள தமிழக மக்களின் அரசை சார்ந்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஆகிறது.
அதே நேரத்தில் இரண்டு தமிழ் தேசிய இனங்களும் பாக்கு நீரினையால் பிரிக்கப்பட்டு இருப்பதனால் ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை தக்கவைக்கவும், பேணவும் தமிழகத் தமிழர்களின் சகோதரத்துவ அரசியல் (Brotherhood politic) ஆதரவு தேவையாக உள்ளது. ஈழத் தமிழினத்திற்கு அரசுக்குரிய அங்கீகாரம் தமிழிழ நிலப்பரப்பிலிருந்து பெறப்படுவது அல்ல.
உலகளாவிய அரசியலில் ஒரு அரசை ஸ்தாபிப்பது என்பது அது வெளியில் இருந்து அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்ற அரசுதான் இந்த பூமிப் பந்தில் நிலைத்து வாழ முடியும். இந்த உலகளாவிய அரசியல் போக்குக்கு இணங்க ஈழத்தமிழர் தமக்கான அங்கீகாரத்தை வெளியிலிருந்துதான் பெறவேண்டும்.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! சற்றுமுன்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வர் விஜய் - தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம்
ஈழத் தமிழர்கள்
ஆகவே அந்த அங்கீகாரம் என்பது தமிழகத்தின் எட்டு கோடி தமிழர்களின் சகோதரத்துவ அரசியல் ஆதரவில் இருந்தே பிறப்பிப்பதுதான் சாத்தியமானது என்பதை ஈழத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களின் அரசரவியல் நோக்கு நிலையிலிருந்து பார்க்கின்ற போது இந்திய அரசியலிலோ, அல்லது தமிழகத்தின் உள்ளக அரசியலிலோ, கட்சிகளின் அரசியலுக்குள்ளோ ஈழத் தமிழர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது.
அது ஈழத் தமிழர்களுக்கு வேண்டாத வேலையும்கூட. இன சகோதரத்துவ அரசியல் என்ற அடிப்படையிலும், ஈழத் தமிழர்கள் அளவால் சிறிய தேசிய இனம் என்ற அடிப்படையிலும் அளவால் பெரிய தமிழக தமிழினத்தின் ஆதரவை நாடிநிற்பதும், அவர்களுக்கான உறவை வளர்ப்பதும் அவசியமானது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் எந்த அரசியல் கட்சியையும் முதல் நிலைப்படுத்துவது மிகத் தவறானது.

யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, யாரை தமிழக மக்கள் விரும்பி தங்களுடைய அரசாங்கமாக தேர்வு செய்வதறார்களோ அவர்களுடன் ஒரு சுமூகமான உறவை வளர்ப்பதும், அந்த நல்லுறவை பேணிப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வியூவமாக எப்போதும் இருக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எமக்குத் தேவையாக உள்ளார்கள் என்ற அடிப்படையில் அனைவரிடமும் ஒரு சுமூகமான உறவை பேண வேண்டியது அவசியமானது. அதுவே தமிழகம் சார்ந்த ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் கொள்கையாக அமைய வேண்டும்.
அரசியலில் நலன்களே முக்கியமானவை, நலன்களின் அடிப்படையிலேயே உறவுகள் மலர்கின்றன என்றவகையில் ஈழத் தமிழர்களுடைய நலனுக்காக, நமது நலன்களை நாம் அடைவதற்காக மட்டுமே தமிழக அரசியலில் பேச வேண்டுமே தவிர தமிழகத்தின் உள்ளக அரசியல் முரண்களுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கிவிடக்கூடாது.
இங்கே ஈழத் தமிழர்களுக்காக யாரும் வாய்கழிய கத்த முடியும் ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு சோறு போடாது. யாரால் தமிழர்களுக்கு நலன் கிடைக்கிறதோ அவரை உண்மையான நண்பனாவான்.
இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற புதிய அரசியல் மாற்றம் என்பது ஈழத் தமிழர்கள் இந்தியா சார்ந்து எடுக்கக்கூடிய புதிய அரசியல் சிந்தனைக்கும், புதிய அரசியல் உறவைப் பலப்படுத்துவதற்குமான வழிமுறைகளும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளது.
சகோதரத்துவ அரசியல்
கற்பனாவாதங்களையும், தூய்மைத்துவ வாதங்களையும் தூக்கி எறிந்து முற்றிலும் இன்றைய உலகளாவிய ஒழுங்குக்கு ஏற்ற வகையில் நடைமுறை சார்ந்து, பழைய கசப்பான அனுபவங்களை மறந்து அல்லது கடந்து எதிர்கால வாழ்வுக்காக, எதிர்கால தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்காக இன்றைய தமிழ் தேசியவாதிகள் முற்றிலும் அறிவார்ந்த அரசியல் முடிவுக்குச் செல்ல வேண்டும்.
தமிழகத்தின் அரசியல் களமும் தேர்தல் புரட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாடமாகவும் முன்னுதாரணமாகவும் எடுத்துக் கொள்ள முடியும். ஈழத் தமிழ அரசியலை முன்னெடுத்துவதற்கும் ஈழத்தினுடைய அரசியலுக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய புவிசார் அரசியலில் தமிழக அரசியலின் பங்கு முதன்மையானது.

இப்போது தமிழகத்தில் புதிய ஒரு கட்சி ஆட்சி அமைக்கத்தான் போகிறது. ஆகவே முற்றிலும் புதியவர்களைக் கொண்ட, புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்ட ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கின்ற பட்சத்தில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசியலில் அரசியலின் நிழலில் தம்மை அசுவாசப்படுத்த வாய்ப்புகளை உடனடியாக தேட வேண்டும்.
ஏற்கனவே கடந்த 36 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த திராவிட கட்சிகள் ஈழத் தமிழர் மீது பாராமுகமாக இருந்தமையும், அதனால் அந்த கட்சிகள் மீது ஈழத் தமிழர்கள் அதிருப்தியும், நம்பிக்கை இனங்களும் கொண்டிருந்தனர்.
அது மாத்திரமல்ல முள்ளிவாய்க்காலில் நாம் அடைந்து பேரவலத்தை இவர்களால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனைத் தவறவிட்டு விட்டார்கள் என்ற மனவருத்தம் ஈழத் தமிழர்களிடம் நிறைவே உள்ளது.
இத்தகைய பின்னணியில் திராவிடக் கட்சிகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்க்கவும், ஆதரவை பெறவும் முடியாமல் போய்விட்டது என்பது உண்மைதான். ஆயினும் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அந்தப் படிப்பினைகளில் இருந்து நாம் புதிய செயலுக்கும் செல்வதே அறிவார்ந்த செயலாகும்.
இப்போது முற்றிலும் புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மாத்திரமல்ல கட்சியின் தலைவர் ஈழத்தமிழ் மனம் வீசும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் உள்ளார் என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அத்தோடு ஒரு புதிய கட்சியுடன் புதிய உறவை பேணுவது இலகுவானது. அவர்களை அணுகுவதும் இலகுவானது என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்கள் தமிழக மக்களின் பெருவிருப்பைப் பெற்று அமைக்கப்படும் தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் உறவை வளர்ப்பதற்கான சகோதரத்துவ அரசியல் வெளியுறவு கொள்கையை ஒன்றை உடனடியாக வகுப்பதும், அதனை செயல்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam