முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(07.07) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024 மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில், முகநூலில் பதிவுகள் இட்டதாக அவர் கைதாகி இருந்தார்.
சிஐடியினரால் குறித்த முகநூல் பதிவு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட நிலையில், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பிணையில் விடுதலை
ஏற்கனவே கைது செய்யப்பட்டு பல வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், வவுனியாவில் அவர் வசித்து வந்ததுடன் போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பாக செயற்பட்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |